
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, அக்.10:
திருக்குறள் தெளிவுரை நூல் வரும் சனிக்கிழமை அக்டோபர் 14-ஆம் நாள் மாலை 4:00 மணி அளவில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கத்தில் நடைபெற உள்ளது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அறிவித்துள்ளார்.
இந்த நூல் வெளியீட்டில் இந்து சங்கம் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளாக திருமுறை வளர்ச்சியிலும் பரப்புதலிலும் முழுமூச்சுடன் செயலாற்றுவதைப் போல திருக்குறள் நெறியை மலேசிய இந்து பெருமக்களிடம், குறிப்பாக மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் மலேசிய இந்து சங்கம் விருப்பம் கொண்டுள்ளதென்று தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
திருக்குறளுக்கு எளிய முறையிலான விளக்கத்துடன் இயற்றப்பட்ட இந்த நூலைப் படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளின்மீது இயல்பாகவே அதிய நாட்டம் ஏற்படும். அதனால், இந்தத் திருக்குறள் தெளிவுரை விளக்க நூலை, அதன் வெளியீட்டுக்குப் பின்னர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் மலேசிய இந்து சங்கம் கொண்டு சேர்க்கும்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளர் டத்தோ பா.சகாதேவன் தலைமையில் வெளியீடு காண இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தான் ஆசியுரை வழங்க இருப்பதாகவும் காவல்துறை மேநாள் அதிகாரி டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், நூலாசிரியர் க.முருகன், டைமென்ஷன் பதிப்பக உரிமையாளர் கேசவன் நாகராஜு, மலேசிய சிகரம் இயக்கத் தலைவர் முனைவர் வீ.வீரமோகன் போன்ற பெருமக்களும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள தங்க கணேசன், இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
