
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிப்பதாக, அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பாதி ஆசிரியர் என்பதைப் போல, ஆசிரியர்களும் தம் மாணவர்களுக்கு பாதி பெற்றோர் என்பது உலக நடைமுறை.
இளம் மாணவர்கள், தங்களின் பகல் பொழுதை பெரும்பாலும் ஆசிரியர்-களுடன்தான் கழிக்கின்றனர். அந்த வகையில், மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறப்பவர்களாக மட்டுமன்றி, அன்பு-கட்டொழுங்கு-நேர்மை உள்ளிட்ட அடிப்படை பண்புநலன்களையும் மாணவச் செல்வங்களுக்கு போதிப்பவ்ர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
ஆசிரியரின் பங்களிப்பு இல்லாமல், எந்த மனிதரின் வாழ்வும் முழுமைப் பெறுவதில்லை. அத்தகைய புனிதமான தொழிலை ஏற்று, நாளைய சமுதாயத்தை இன்றே வடிவமைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்து தெரிவிப்பதாக மே-16 ஆசிரியர் தினத்தை முன்னுட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தங்க கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்
