25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

வண்ணத் திருநீறு, காலில் கயிறு,தொண்டைக்குழியில் ருத்திராக்க மணி: பள்ளிப் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்! -இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன்

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், ஜூலை 02:
தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் நம் சமுதாயப் பிள்ளைகள், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவதுடன் சமய நடவடிக்கையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது சிறப்புதான். அதற்காக சமய ஒழுங்கிற்கும் ஆன்மிக நன்னெறிக்-கும் மாறாக நடந்து கொள்வதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளைகள் பல வண்ணத்திலான திரு-நீற்றை அணிந்து வருவதாக பல தரப்பினரும் புகார் செய்து வருகின்றனர். வெண்மை நிறத்திலான அசல் திருநீற்றில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள், பொன் வண்ணம் உள்ளிட்ட வண்ணங்களைக் கலந்து அவற்றை நெற்றியில் அணிந்து பள்ளிக்கு வரும்போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருவ-தாக ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி வாரியக் குழுவினர், சமூக ஆர்வலர்கள், சமயப் பற்றாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

திருநீறு பூசுவது, நெற்றியில் இறைநாமத்தைச் சாற்றுவதற்குச் சமம். அப்படிப்பட்ட இறையமுதப் பண்டத்திற்கு வண்ணம் சேர்ப்பதும் அதை அணிந்து பள்ளிக்குச் செல்வதும் பொருத்தமல்ல; இது, சமய நடவடிக்கைக்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.

அதைப்போல காலில் கயிறு கட்டிக்கொள்ளும் வழக்கமும் தமிழ்ப் பள்ளி மாணவர்களிடம் மிகுந்து காணப்படுகிறது. இடுப்பு, மணிக்கட்டு, முழங்-கைக்கு மேற்பகுதி மற்றும் கழுத்துப்பகுதியில்தான் கயிறு கட்டிக் கொள்வது நம் சமுதாயத்தில் பழக்கம்; இப்பொழுது காலிலும் பலவண்ணக் கயிறுகளை கட்டிக் கொண்டு பாடசாலைக்குச் செல்லும் வழக்கம் அரும்பியுள்ளது.

இந்தப் புதுவழக்கம், இடைநிலைப் பள்ளிவரை நீடித்தால் நிலைமை இன்னும் ஆபத்தாகும். சோதிடர் கூறியதால் அவ்வாறு செய்வதாக இதற்கெல்லாம் காரணம் கூறுகின்றனர். பத்து திருமுறைப் பாடல்களை மனப்பாடம் செய்யும்-படி எவரும் சொன்னதாக ஒரு மாணவரும் ஒருகாலும் சொல்வதில்லை. ஆனால், இதைப்போன்ற ஆகாத வேலையையும் சமயத்திற்குப் புறம்பான காரியத்தையும் செய்ய நம்சமுதாயப் பிள்ளைகள் தயங்குவதில்லை.

பள்ளி ஆசிரியர்களால் எல்லாவற்றையும் எல்லாப் பொழுதிலும் கண்காணிக்க முடியாது; ஆதலால், பெற்றோரும் தம் பிள்ளைகள் மீது எந்நேரமும் கவனம் செலுத்திவர வேண்டும். குறிப்பாக, தவறு செய்யும் பிள்ளைகளைக் கண்டிக்க நம் அன்னையர் தயங்கக்கூடாது; நன்னெறியும் ஒழுக்கமும்தான் எல்லா-வற்றுக்கும் முற்பட்டவை என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நாளைய சமுதாயத்திற்கு ஏற்ற நல்குடிமக்களாக உருவாகும்படி சிறுவயது முதலே கண்காணிக்க வேண்டும் என்று தங்க கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

போதாக்குறைக்கு ஒற்றை ருத்திராக்க மணி தொண்டைக் குழியில் அழுத்தமாக பதியும்படி, அது கோக்கப்பட்ட கயிற்றை கழுத்தில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வது மிகவும் ஆபத்தானது. கயிறு இறுகி மூச்சடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி அனுமதிக்-கிறார்கள் என்று தெரியவில்லை. இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் மறுப்பு தெரிவித்து இளம் மாணாக்கருக்கு நல்லுரை வழங்க வேண்டும் என்று மலேசிய சர்வசமய ஆலோசனை மன்ற உறுப்பினருமான ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன்
தேசியத் தலைவர்
2-07-2024

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles