சமரசக் கொடி படபடக்கிறது-தங்க கணேசன் பெருமிதம்!

🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 13:
மலேசிய இந்து சங்க வரலாற்றில் இன்றைய தினம், 2024 ஜூலை 13-ஆம் நாள், ஒரு பொன்னான நாள் என்று சங்கத்தின் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்துப் பெருமக்களின் மறுமலர்ச்சி-இந்து சங்கத்தின் எழுச்சி என்னும் இரு அம்சங்களை முன்னிறுத்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷானுடன் சமரசம் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து சங்கத்தின் 47-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூலை 21-ஆம் நாள் ஜெஞ்சாரோம், பண்டார் சௌஜானா புத்ரா, மாஹ்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது.

ஆண்டுக் கூட்டத்தில் மத்திய செயலவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்பது பேருக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஜுலை13, சனிக்கிழமை இந்து சங்க தலைமையகத்தில் நடைபெற்றபோது பத்து பேர் தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவர் தன்னுடைய வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதால், ஏனைய ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக, தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய வழக்கறிஞர் திருமதி சகுந்தலா நாராயணசாமி தெரிவித்தார்.
முன்னதாக, இந்து சங்கத்தின் இந்நாள் தலைவரும் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷானும் கலந்துரையாடி, இந்து சங்கத்தின் நலம் கருதி போட்டியின்றி சங்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்ததன் அடிப்படையில், ஆண்டுக் கூட்டங்களில் வழக்கமாக இடம்பெறும் தேர்தல் இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனால், பல்லாயிரக் கணக்கான வெள்ளி மிச்சப்பட்டுள்ளதுடன், வீண் உழைப்பும் கால விரயமும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மத்திய செயலவைக்கு பரமேசுவரி த/பெ இராமசாமி, டத்தோ மருதைவீரன் த/பெ செர்பமால், பாலகிருஷ்ணன் த/பெ பரசுராமன், கணமூர்த்தி த/பெ அரிகிருஷ்ணன், டாக்டர் லலிதா த/பெ இராமசாமி, விநாயகமூர்த்தி த/பெ சுப்பிரமணியன், சத்திவேல் நாயுடு த/பெ சண்முகம், சிவநாதன் த/பெ சுப்பிரமணியன், மகேந்திரன் த/பெ முருகன் ஆகிய ஒன்பது பேர் புதிதாக தேர்வு பெற்றுள்ளவர்கள்.
தேசியத் தலைவர் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன், துணைத் தலைவர் கணேஷ் பாபு ஆகியோர் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.
இந்த ஆண்டு தேசிய ஆண்டுக் கூட்டத்தை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவிருக்கிறார் என்றும் தங்க கணேசன் மேலும் தெரிவித்தார்.
