
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
புத்ராஜெயா, ஜூலை 22:
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், மலேசிய இந்து சங்கத்திற்கு மீண்டும் தேசியத் தலைவராகத் தேர்வாகி உள்ளார்.
சங்கத்தின் 47-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாஹ்சா பன்னாட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற அதிகாரப்படியான தொடக்க விழா, முறையாக நிறைவடைந்தபின், 2024-25 ஓராண்டுத் தவணைக்கான புதிய தலைமைத்துவ தேர்தல் நடைபெற்றது.

போட்டியில்லாத இவ்வாண்டுக் கூட்டத்தில், ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் மீண்டும் தேசியத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப் போல, கணேஷ் பாபுவும் தேசிய துணைத் தலைவராக மீண்டும் தேர்வானார். பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மா. முனியாண்டியும் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மற்றொரு உதவித் தலைவராக ச. சத்திவேல் நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் புதிய பொதுச் செயலராக வழக்கறிஞர் சு.விநாயகமூர்த்தி யும் துணைச் செயலராக மு.மகேந்திரனும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைப்போன்று, புதிய பொருளாளராக தொண்டர்மாமணி இரா. பெருமாள் தேர்வானார்.
மீண்டும் தன்னை தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்த புதிய தேசியப் பேரவைக்கு நன்றி தெரிவித்த தங்க கணேசன், இந்து சமுதாயத்திற்கு தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபடப் போவதாகவும் சங்கத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபடப் போவதாகத் தெரிவித்த வேளையில், சங்கத்தின் எதிர்கால நலம் கருதி மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியின் அடிப்படையில் தேசியப் பேரவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள், புதிய சிக்கல் எதனையும் ஏற்படுத்தாமல் சங்கத்தின் ஒருமித்த முன்னெடுப்பிற்கு துணை நிற்பார்கள் என்று துணைத் தலைவர் கணேஷ் பாபு நம்பிக்கைத் தெரிவித்தார். முன்னதாக மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இந்து சங்க தேசிய ஆண்டுக் கூட்டத்தை. அதிகாரப்படியாக தொடக்கி வைத்தார்.
