
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஜூலை 27:
ஆலயங்களில் பக்தர்களுக்கான அர்ச்சகப் பணி, திருக்குடமுழுக்கு விழா, தவிர இல்லம்-பொது அரங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகள் மற்றும் நல்லடக்க நிகழ்வு, ஆத்மசாந்தி நிகழ்ச்சி போன்றவற்றை நடத்தி வைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இங்குவரும் அர்ச்சகர்களில் பெரும்பாலோர் சீராகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ளும் வேளையில், சிலரோ தங்களின் சொந்த ஊரில் மனைவி மக்கள் இருக்கும்பொழுது, இந்த நாட்டிலும் இங்குள்ள அபலைப் பெண்களை ஒன்றுக்கு இரண்டு என்றெல்லாம் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட குருக்கள்மார் சமயத்திற்கு இழுக்கானவர்கள் மட்டுமல்ல; சமுதாய அருவருப்பானவர்கள் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

மலேசியவாழ் இந்து சமுதாயத்தில் நிலவும் திருமண விகிதம் மற்றும் இந்துக் குடும்பங்களில் நிலவும் சிக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்து மணமக்களுக்கு திருமண முன்பயிற்சி நடத்துவதைக் கட்டாயமாக்கும்படி மகளிர் குடும்ப சமூக நலத் துறை, தேசிய பதிவுத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் அனைத்து மாநில அலுவலகங்களிலும் திருமண துணைப் பதிவதிகாரியை நியமிக்கும்படி தேசியப் பதிவுத் துறைக்கு கோரிக்கை வைக்கும் அதேவேளை, ‘மகளிர், குடும்ப சமூக நலத்துறை, மலேசிய இந்து சங்க இணை ஆதரவுடன் உருவாக்கிய திருமண முன் பயிற்றுநர்களையே இந்துத் தம்பதிகளுக்கான திருமண துணைப் பதிவதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
