
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஆக.08:
‘பூக்குளியல்’ என்ற பெயரில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள சடங்கில் இந்து மக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம்; அதில் அக்கறையும் செலுத்த வேண்டாம் என்று மலேசிய இந்து சங்கம் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அதன் தேசியத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சடங்கை செய்பவர்கள், பெரும்பாலும் இந்து சமயத்தைச் சாராதவர்-களாக இருக்கின்றனர். தவிர, அவர்களின் நோக்கமும் செயலும் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை.
ஏதோவொரு மறைமுக கருத்தை உள்வைத்து கபட நோக்கத்துடன், ஆளை மயக்கும் வசியத் தன்மையுடன், வெளிப்படையாக சொல்ல முடியாத சில பண்டங்களை உண்ணவைத்தும் பானங்களைப் பருகவைத்தும் இத்தகைய பூக்குளியல் சடங்கை நிறைவேற்றுகின்றனர்.
பொதுவாக, சமயத்திற்கே உரிய அன்பு-அரவணைப்பு-கருணை-பரோபகாரம்-ஆன்மிகம்-நன்னெறி உள்ளிட்ட எந்தக் கூறும் இல்லாமல், அவசரகதியில் இயந்திரப் பெண்களைப் போல, பெண்மைக்கேயுரிய தாய்மைப் பண்பு இல்லாமல் செயல்படும் இத்தகைய சடங்குகளில் கலந்து கொள்வதைவிட, தூய்மையான உள்ளத்துடன் இறைவனை வணங்கினாலே அவனருள் மட்டுமல்ல; வாழ்க்கையில் எல்லா நிலையிலும் பரம்பொருளின் பாதுகாப்பும் கிடைக்கும்.
சாத்திரம், சடங்கு, பூசை, ஆராதனை, யாகம் உள்ளிட்ட எத்தனையோ வழிபாட்டு முறைகள் இந்து சமயத்தில் இருக்கும்பொழுது, இந்து சமயத்திற்கு தொடர்பில்லாத, இந்து சமயத்தைச் சாராத எவரோ செய்யும் வசியத்தன சடங்குகளில் எதற்காக கலந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருகணம் சிந்தித்து, நிதானித்து, இந்து மக்களுக்கே உரித்தான கம்பீரம்-இறைநேசம் ஆகியவற்றை எக்காலமும் மனதில் சுமந்து, இந்துவாகப் பிறந்த நாம், இந்துவாகவே வாழ்வை நிறைவு செய்வோம் என்பதில் உறுதியாக இருப்போம் என்று ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.