
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஆக.15:
மாயோன் என்றும் சேயோன் என்றும் மருதநிலவாழ் மக்களால் வாஞ்சையுடன் வணங்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்க் கடவுளாக தமிழர்களால் பெரிதும் வணங்கப்படும் தெய்வமும் இந்து சமய அறுகொள்கைகளின் ஒன்றான கௌமார வழிபாட்டு முறையின் நாயகனுமான திருமுருகக் கடவுளின் திருவுருவத்தை ஓர் இளம்பெண் தன்னுடைய வலப்புற மார்பகத்தில் பச்சை குத்திக்கொள்ளும் காட்சியைக் கொண்ட காணொளி கடந்த இரண்டு-மூன்று தினங்களாக மலேசிய இந்தியர்களிடையே சமூக ஊடகத்தில் பரப்பப்படும் செயல் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அன்பர்கள், இந்த அக்கப்போரான காணொளியைப் பகிர்வதை உடனே நிறுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆன்மிக நன்னெறி, சமயத் தெளிவுடன் திருமுருகக் கடவுளின் இறை-மாண்பையும் அறிந்த பெண்ணாக இருந்தால், இப்படி ஆகாத இடத்தில் ஆகாத வேலையைச் செய்திருக்க மாட்டார்.
மலேசிய இந்தியர்களிடையே, குறிப்பாக இந்து மக்களால் சமூக வலைதளத்-தின்மூலம் அதிகமாக பகிரப்படும் இந்தக் காட்சியில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பில் வெளிப்படையாக வணக்கத்திற்குரிய ஓர் இறை-வுருவத்தைப் பதிவு செய்யும் இளைஞனும் என்ன காரணம் சொல்லப்-பட்டாலும் அந்தப் பெண்ணைப் போன்ற கீழான புத்தி கொண்டவன்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இதைக் காட்சிப்படுத்தி இணையதளத்தில் பரவவிட்டக் கூட்டம், இந்து சமயத்திற்கு எதிராக சதிசெய்யும் குழுவாகவும் இருக்கக்கூடும். எது எவ்வாறாயினும் இந்தக் காட்சி, தங்களுடைய விவேக தொலைபேசிக்கு அனுப்பப்பட்டால், அதை மேலும் பரவாமல் செய்வதுடன் இந்தக் காணொளிக் காட்சியை உடனே அகற்றிவிடும்படியும் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்ற உறுப்பினருமான ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
