
கோலாலம்பூர், மே 5-
வரும் மே 12 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் ஆலயத்தில் 18 ஆம் ஆண்டு அகத்தியர் பெருமானின் குருபூஜை மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மே 12 ஆம் தேதி காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணிவரை அகத்தியர் குரு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆசான் மகாரிசி அகத்தியரின் 18 ஆம் ஆண்டு குரு பூஜையானது சித்த ரிசி கணங்களின் ஆசியோடும் அவர்களின் வழி நடத்தலோடு இனிதே நடைபெறவிருக்கிறது.
அன்றைய தினம் மெய் அன்பர்கள் விரதம் இருந்து பால்குடம் ஏந்தி அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்கிறார்கள் என்று ஏற்பாட்டுக் குழு தலைவரும் அகத்தியர் அருள் நயன சபைத் தலைவருமான எஸ்.பக்தவச்சலம் தெரிவித்தார்.
இவ்வாண்டு அகத்தியர் குரு பூஜை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த குருபூஜை விழாவில் கலந்து கொள்ளும் வேளையில் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் அன்னதானமும் பரிமாறப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு மேல் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அகத்தியர் வேதம் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்று அகத்தியர் அருள் நயன சபையைச் சேர்ந்த சவரிமுத்து தெரிவித்தார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த அகத்தியர் தாசன் மருத்துவர் வி.எம். ஜெயபாலன் எழுதியிருக்கும் அகத்தியர் வேதம் நூல் வெளியீட்டு விழாவில் யாவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப் படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
அகத்தியர் தொண்டன் முத்துசாமி குடும்பத்தினர் இந்த நூலை வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தர்கள், முனிவர்கள் வரிசையில் தலையாயவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் உரியவருமான அகத்தியப் பெருமான், பொதிகைமுனி, கும்பமுனி, தமிழ் முனிவன் என்கின்ற பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார்.
உலக சமத்துவத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அகத்தியர் ஆவார் என்று அவர் சொன்னார்.
