
ஸ்கூடாய் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படையில் (PALAPES) பயிற்சி பெற்ற 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வலிப்பால் மரணமடைந்தார் என கூறப்பட்டாலும், அவரது கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. மேலும், உடலின் பல பகுதிகளில் காயங்களும் காணப்பட்டுள்ளதால், மரணத்தில் பல மர்மங்கள் மறைந்துள்ளன என சந்தேகம் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து, மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என சம்சுலின் தாயார் தொடர்ந்து போராடி வருகிறார். “அவரின் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயமும் துணை நிற்கும்,” என்று கிம்மாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், கிம்மாவின் சார்பில் இதுவரை 30க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், போலிசார் துரிதமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் எம்ஷெட் கனி ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, சம்சுல் தாயாருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
