
நாட்டின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இன்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் மக்களிடம் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறவுள்ள மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியர்களை மையமாகக் கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தேசியக் கொடி வழங்கப்பட்டது.
இந்திய சமூகத்தினர் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் விளக்கினார்.
“இந்திய சமூகத்தினர் எப்போதும் நாட்டுப்பற்றுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என யாரும் குற்றம் சாட்டக் கூடாது,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வரும் சுதந்திர தினத்தையொட்டி, இந்திய சமூக மக்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில், மக்கள் சக்தி கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ரமேஷ், ஏற்பாட்டுக் குழு தலைவர் குகேஸ், விலாயா மாநில மைக்கா தலைவர் டத்தோ சைமன் ராஜா உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
