
கோலாலம்பூர் பிபிஆர் கம்போங் முஹிபா குடியிருப்புகளில் நீர் சேவை துண்டிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் கடும் அவதியை எதிர்கொண்டுள்ளனர்.
கூட்டரசுப் பிரதேச பிபிபி கட்சித் தலைவர் சத்தியா தெரிவித்ததாவது, அங்குள்ள சிலர் நீர் கட்டணத்தை முறையாக செலுத்தாததால் டிபிகேஎல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குள் வாழும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“அவர்களுக்கு போதுமான மாதாந்திர வருமானம் இல்லை என்பதால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. நீர் சேவை இல்லாமல் குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை; உணவையும் தயாரிக்க முடியவில்லை என பல பெண்கள் என்னிடம் முறையிட்டனர்” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் கூடி தங்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அவர்களுக்கு துணை நிற்க பிபிபி கட்சியினரும் அங்கு சென்றனர். அவர்களின் சார்பில் சத்தியா, டத்தோ பண்டாரிடமும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடமும் மகஜர் அளித்தார். இரு தரப்பினரும் மகஜரைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், வருமானமின்றி தவிக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு சமூக நல உதவிகள் பிரிவின் கீழ் மித்ரா உடனடியாக உதவ முன்வர வேண்டும் என சத்தியா வலியுறுத்தினார்.
