
மலேசியா தனது 68ஆம் ஆண்டு மெர்டேக்காவை நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, மஇகா இளைஞர் பணிப்படை ஏற்பாட்டில் இன்று மெர்டேக்கா மோட்டார் சைக்கிள் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
மலூரியில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு மஇகா இளைஞர் பணிப்படை தலைவர் அண்ட்ரூ டேவிட் தலைமையாற்றினார். இதில் மஇகா தேசிய இளைஞர் அணி துணை தலைவர் கேசவன், மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ தமிழ் வாணன், டத்தோ ராஜசேகரன், பெந்தோங் மஇகா தொகுதி தலைவர் டாக்டர் ஜெயந்திரன், டத்தோ தினாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். செராஸ் காவல் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தோ சி ஹாவும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

125 மோட்டார் சைக்கிளோட்டிகள் தேசிய கொடிகளை ஏந்தி தலைநகரைச் சுற்றி 20 கிலோமீட்டர் ஊர்வலம் வந்தனர். மாலை 5 மணிக்கு பிரிக்க்பீல்ட்ஸ் லிட்டில் காரசாரம் உணவகத்தின் முன் வந்தடைந்த இந்த ஊர்வலத்தை மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வரவேற்றார்.
பெரிய மற்றும் சிறிய மோட்டார் சைக்கிளோட்டிகள் இணைந்து பங்கேற்றது நிகழ்ச்சிக்கு வித்தியாசமான சிறப்பை சேர்த்தது.
இதேவேளையில், பகடி வதை (bullying) சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மஇகா இளைஞர் பணிப்படை சார்பில் பகடி வதை ஆலோசனை ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சேவை 24 மணி நேரமும் இயங்கும் என்றும், பகடிவதைக்கு ஆளாகும் இளைஞர்களுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்றும் தலைவர் அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 017-9090 997.
