
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து மீலாதுன் நபி ஊர்வலத்தை விமரிசையாகக் கொண்டாடினர்.
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் இந்த நாள், நபிகள் நாயகத்தின் போதனைகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் ஒழுக்கம், உண்மை, நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்வதன் மூலம் அவரின் போதனைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மலேசிய முஸ்லிம் இளைஞர் மன்றம் (MMYC) ஏற்பாட்டில் இன்று (செப்டம்பர் 5) மாலை 2 மணிக்கு மேல், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் — ஜாலான் மஸ்ஜித் இந்தியா, துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி வழியாக — நடைபெற்ற ஊர்வலம் மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை வந்தடைந்தது.
காவல் துறையின் அனுமதியுடனும், பல இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆதரவுடனும் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றதாக எம்.எம்.ஒய்.சி. ஆலோசகர் அஸ்ரின் தெரிவித்தார்.

மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள், மஸ்ஜித்கள், மதரஸாக்கள் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வழி நெடுக நபி புகழ்பாடினர்.
இந்த ஊர்வலத்திற்கு பெர்மிம் பேரவை, பெரஸ்மா, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத் துறை, முக்மின் அமைப்பு, டி.பி.கே.எல் மற்றும் காவல்துறை ஆகியோர் பக்கபலமாய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



