
கெஅடிலான் கட்சியைவிட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இணைவதற்கு தமக்கு வலை வீச பட்டதாகவும் விலை பேச பட்டதாகவும் ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தி அடிப்படையற்றது.
அச்செய்தியில் உண்மையில்லை என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட அந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தாம் பதிவிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான் சார்ந்திருக்கும் கெஅடிலான் கட்சியை விட்டு வெளியேறச் சொல்லி என்னிடம் யாரும் வந்து பேசவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அந்தப் பத்திரிக்கை செய்தி, தாம் அஸ்மின் அலி ஆதரவாளர்களுடன் பேரம் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் நடைபெறவில்லை. அந்த செய்தி முற்றிலும் பொய்யான தகவலை ஏந்தி வந்துள்ளது என்றார் அவர்.
ஒருவேளை அந்த பத்திரிகை செய்தியில் எழுதப்பட்டிருப்பதை போல தனக்கு யாராவது வலைவீசி இருந்தாலும் அல்லது பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சொல்லி விலை பேசி இருந்தால் தாம் ஒருபோதும் பக்கத்தான் ஹரப்பன் கட்சியைவிட்டு வெளியேற திட்டம் கொண்டிருக்கவில்லை. தாம் எல்லா நிலையிலும் பிகேஆர் மற்றும் பக்காத்தான் அணிக்கு முழு விசுவாசியாக இருந்து வந்துள்ளதாகவும் இனியும் அப்படித்தான் இருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் ஒருபோதும் அன்வாருக்கு துரோகம் செய்ய மாட்டேன். அதேபோல என்னை நாடாளுமன்ற உறுப்பினராக வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்யமாட்டேன் என்று அவர் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தம்முடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் அந்த குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
