
மலேசியாவிலுள்ள முதலாளிகளால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் உறுதியளித்தார்.
இது தொடர்பில் தமிழக அரசுடன் பேச்சு நடத்தப்படும். தமிழ்நாட்டு அரசுடன் மலேசிய அரசாங்கம் சிறந்த நட்புணர்வை கொண்டிருக்கிறது என்று இணையம் வாயிலாக நடைபெற்ற சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஒளிபரப்பான ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சியில், மலேசியாவில் வேலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர்
சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இந்திய வாழை இலை உணவகத்தில் வேலை செய்தபோது துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் மைக்கல் என்ற நபர் ஓரினப் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதோடு, அவருடைய உடலில் பெட்ரோல் உற்றித் தீ வைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலாயுதம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் மற்றும் மனிதவள அமைச்சு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
