34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் புறக்கணிக்கப்படுகிறார?

நாட்டில் கோவிட்-19 பெருந்தாக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கின்ற நிலையில் சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அந்தப் போராட்ட களத்தின் தலைமைப் பொறுப்பில் தொடரவில்லை என்ற ஊகம், ஊடக வட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது.

அண்மைக் காலமாக, அவர் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் புறக்கணிக்கப்படும் நிலையில் அவரின் துணை அதிகாரிகள்தான் இப்பொழுது பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

சுகாதாரத் துறையில் நிலவும் உள் அரசியல் விளையாட்டின் காரணமாக அத்துறையின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் முட்டலும் மோதலும் நிலவுகிறது. குறிப்பாக, கோவிட்-19 நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதில் டாக்டர் நோர் ஹிஷாமுக்கும் அத்துறையின் தலைமைச் செயலாலர் டத்தோ முகமட் ஷாஃபிக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ள விவகாரம் பிரதமர் அலுவலகம் வரை எதிரொலிக்கிறதாம்.

இதன் விளைவாக, பொது சுகாதார துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ச்சோங் ச்சீ கியோங் தலைமையில் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான மாற்று பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

கொள்கை முடிவு எடுப்பதிலும் பிரதமருக்கு நேரடி தகவல் தெரிவிப்பதிலும் டாக்டர் ச்சோங் வழிகாட்டுதலின்படிதான் அனைத்து நிறைவேறுவதாகத் தெரிகிறது. ஆனாலும், இதன் தொடர்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதா அல்லது வாய்மொழி உத்தரவின்படி இவை யாவும் நடைபெறுகிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. சுகாதார அமைச்சில் இப்படிப்பட்ட நிலை, இதற்கு முன் எழுந்ததில்லை.

டாக்டர் நோர் ஹிஷாமைப் பொறுத்தவரை, தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால், தேசிய பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த பலரும் வருத்தமடைந்திருக்கும் தகவலும் கசிந்து வருகிறது.

டாக்டர் நோர் ஹிஷாமை விலக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ள-தாகவும் அரசாங்கத்தின்மீது மக்களிடையே நிலவும் எதிர்மறையான எண்ணத்தை இது மேலும் அதிகரிக்குமோ என்னும் ஐயப்பாட்டில் அது கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles