
நாட்டில் அமுல்படுத்தப் பட்ட அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டு விட்டதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியூடின் இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த அவசரகால உத்தரவு ஜூலை 21ஆம் தேதியோடு மீட்டுக்கொள்ள பட்டதாக தக்கியூடின் அறிவித்தார்.
இந்த அவசரகால உத்தரவை மீட்டுக் கொண்டது தொடர்பில் ஏன் அறிவிப்பு செய்யப்படவில்லை.
மேலும் இது மீட்டுக் கொண்டது தொடர்பில் மாமன்னரின் ஆலோசனை பெறப்பட்டதா என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்னமும் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் ஆகியோர் உட்பட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் கேள்விகளை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த அவசர உத்தரவை ரத்து செய்வது தொடர்பில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மாமன்னரை சந்தித்து அனுமதி பெற்றாரா என்றும் இவர்கள் கேள்வி எழுப்பிய வருவதால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கிறது.
இந்நிலையில் இந்த அவசரகால உத்தரவு இன்னமும் பரிசீலனையில் இருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் 11ஆம் தேதி அமுலுக்கு வந்த இந்த அவசர கால உத்தரவு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியோடு முடிவடைகிறது இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
