
கொரோனா பரவல் நாளும் அதிகரித்து வருவதால், சுகாதார அமைச்சு நாடு முழுவதும் நிறுவியுள்ள ‘கோவிட் மதிப்பீட்டு மையங்கள்’(சிஏசி) மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய மையங்கள் பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமற்ற வகையில் அமைந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் ஒரு பேரிடர் மேலாண்மை நடுவத்தை சிறந்த முறையில் அமைக்க இன்றைய தேசியக் கூட்டணி அரசு தவறிவிட்டதால் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, பல்லாயிரக் கணக்கான முன்களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட கோவிட் மதிப்பிட்டு மையங்கள் குறித்து மத்தியக் கூட்டரசு ஏனோதானோ வென்று இருக்க முடியாது என்று குணராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மெகா தடுப்பூசி மையங்களை ஆடம்பர தங்கும் விடுதிகளிலும் மற்றும் பிரபல வர்த்தக மையங்களிலும் அமைத்துள்ளது குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் தேசியக் கூட்டணி அரசு, கோவிட் மதிப்பீட்டு மையங்களைப் பற்றியும் அதே அக்கறை கொள்ள வேண்டும்.
காரணம், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி அவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு வழிகாண வைப்பது சிஏசி மையங்கள்தான் என்று அவர் தெரிவித்தார்.
