

பல்லாயிரக் கணக்கில் கொரோனா பெருந்தொற்றையும் ஆயிரக் கணக்கில் உயிர்ப் பலியையும் தடுக்க முடியாவிட்டால் தேசியக் கூட்டணி அரசும் பிரதமரும் உடனே பதவி விலக வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கேட்டுக் கொண்டதுடன் இதன் தொடர்பில் போலீஸ் புகாரும் செய்துள்ளார்.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கோவிட்-19 தாக்கம் மற்றும் மரணம் குறித்து அன்றாடம் அறிவித்துவரும் தகவலின்படி ஆகஸ்ட் முதல் நாளில் 17,250 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அன்றைய தினத்தில் 160 பேர் மரணமும் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அன்றாடம் 10,000-க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு ஆளாவதும் நூற்றுக் கணக்கானோர் இறப்பதும் ஒரு மலேசியக் குடிமகன் என்னும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதாலும் என்னை மிகவும் வேதனைப்படுத்துகின்றன. நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையில் இருக்கின்ற வேளையிலும் மக்கள் இந்த அளவுக்கு பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 13 முதல் பொது இயக்க கட்டுப்பாடு(பிகேபி) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிகேபி நடைமுறைக் காலத்தில் பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சேவையை நாடுபவர்கள், அத்யாவசிய பொருட்களை வாங்க விரும்புபவர்கள், பொருளாதார நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களைத் தவிர பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மாநில எல்லையைக் கடக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன், உணவகத்தில் சாப்பிடவோ, உடற்பயிற்சி செய்யவோ, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அறவே அனுமதி இல்லாத அளவுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது.
கொரோனா பாதிப்பை மேலும் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் அவசரகாலச் சட்டத்தையும் இந்த அரசு அறிவித்தது. அப்படி இருந்தும் பல்லாயிரக் கணக்கில் தோய்த் தொற்று ஏற்படுவதில் இருந்தும் நூற்றுக் கணக்கில் மடிவதில் இருந்தும் மக்களைக் காக்க தேசியக் கூட்டணி அரசுடன் பிரதமரும் தவறிவிட்டனர். குறிப்பாக, சுகாதாரத் துறை தோல்வி அடைந்துவிட்டது.
நாட்டையும் மக்களையும் நேசிக்கும் குடிமகன் என்ற முறையில், பிரதமர் மஹியாடின் யாசினும் அவரின் தலைமையிலான அரசும் இன்றைய கொரோனா காலத்தில் மலேசியர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று கருதுகிறேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும்கூட கொரோனா பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நான் உணர்கிறேன்.
எனவே, அரச நிருவாக இயந்திரத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டான்ஸ்ரீ மஹியாடி யாசின், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா, மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்களின்மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி போலீஸ் புகார் செய்திருப்பதாக கோத்தா ராஜா பிகேஆர் தலைவருமான மாண்புமிகு ஜி.குணராஜ் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
